படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
26th May, 2013
நினைவுத்திறன் மேம்பட
மூளை நன்கு செயல்பட சில குறிப்புகள்.
மாணவர்கள் தேர்வு நடக்கும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான மனநிலையில்
இருப்பார்கள். எப்போதையும் விட அதிக அன இறுக்கம், குறைவான தூக்கம், அதிக நேரம்
படிப்பு என்று ஒருவித போராட்ட சூழ்நிலையில் பதட்டத்தோடு காணப்படுவார்கள்.
உண்ணக்கூடாதது :
இப்படி குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத்
தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை
எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக
ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய்
பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை
வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும். அதிக தாகத்தை
உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர்
தவிர்க்கப்பட வேண்டும்
எடுத்துக்கொள்ள வேண்டியவை :
காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில்
தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை,
அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை
வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி,
ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால்
உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும்
கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய
சத்துக்களை கொடுக்கும்.
பதட்டம் குறைய :
தேர்வு வேளைகளில் ஒருவித பதட்டமும், பயமும் மனதில் கூத்தாடும். இதை
குறைக்கவும், மனம் அமைதியாக செயல்படவும், நரம்பு மண்டலங்கள் சிறப்பாக இயங்கவும்.
மூளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவும், நாடி சுத்தி பிராணயாமம் மூன்று நிமிடம்
தினமும் இரண்டு வேளை செய்யலாம். ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக படித்தப்பின் ஐந்து
நிமிட இடைவேளை எடுத்துக்கொண்டு, ஒரு சின்ன நடை போடலாம், குதிக்கலாம். சூரிய
நமஸ்காரம் செய்யலாம் அல்லது தண்டால் செய்யலாம். இவைகள் உடலின் ரத்த ஓட்டம்
சிறப்பாக செயல்பட உதவும். ஒவ்வொரு முறையும் படிக்க அமரும் முன் முகம் கை
கால்களைக் கழுவி துடைத்து விட்டு செல்ல வேண்டும். இதுவும் உடலுக்கும் மூளைக்கும்
புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அப்போது நரம்பு மண்டலங்கள் உற்சாகமடையும். மன
ஒருமைப்பாடு, நினைவுத் திறன் கூடும். தேர்வு நேரத்தில் இப்படி நேரத்தை வீணாக்கலாமா
என்று தோன்றலாம். நாம் செலவு செய்யும் இந்த சில நிமிடங்கள் நிச்சயமாக படிக்கும்
திறனை மேம்படுத்தும்.
தேர்வு எழுதச் செல்லும் வேளையிலே:
தேர்வு எழுதச் செல்லும் போது, பதட்டமும், இதயத்தின் படபடப்பும் கூடும்.
சிலருக்கு இந்த பதட்டம் கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். எல்லாம்
நன்றாக படித்து விட்டோமா? தெரிந்த கேள்விகள் வருமா? பதில் நன்றாக எழுத முடியுமா?
மதிப்பெண்கள் என்னவாகுமோ? என்ற எண்ணங்கள் பொங்கும். இறைவன் மீது நம்பிக்கையுடன்
உங்களது ஒரு காலையும், உங்கள் மீது நம்பிக்கையுடன் உங்கள் மறுகாலையும் எடுத்து
வைத்து உற்சாகத்தோடு தேர்வு அறைக்கு கம்பீரமாக செல்லுங்கள்.
எது வந்தாலும் வரட்டும் எதிர் கொள்வேன், வெற்றி பெறுவேன் என்ற
நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அப்போது யாவும்
நல்லபடியாக நடக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் வெற்றிக்கும் உயர்வான
எதிர்காலத்திற்கும் எமது வாழ்த்துக்கள்.
நன்றி: சிறுப்பிட்டி
No comments:
Post a Comment